
பல மதாங்களுக்கு பிறகு இந்த வலைப்பதிவை தொடங்கும் முயற்சியாக 'பெயர்க்காரணம்' என்னும் தலைப்பில் எழுதியுள்ளேன். எல்லோருக்கும் பிறந்த சில நாட்களிலே பெயர் சூட்டுவார்கள். அப்படி சூட்டப்படும் பெயருக்கு கண்டிப்பாக ஒரு காரணமிருக்கும். அப்பெயர்காரணத்தை மையமாக கொண்டு என் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை இந்த வலைப்பதிவில் எழுதியுள்ளேன்.
என் பெயரோ இளஞ்செழியன், அழகான தமிழ் பெயர். சிறுவயதிலிருந்தே நண்பர்கள் ஆசிரியர்கள் மற்றும் பலர் என்னிடம் கேட்கும் கேள்வி," உன்பெயரின் அர்த்தம் என்ன அல்லது எதற்க்காக உனக்கு இந்த பெயர் வைத்தார்கள்". அப்பொழுது என்னால் முடிந்த ஒரே பதில் புன்னகை மட்டும்தான். நான் முன்றாம் வகுப்பில், தமிழ் புத்தகத்தில் முன்றாம் பாடத்தில் காவடி ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் பற்றி இருந்தது. அதில் 'செழிய' என்றால் 'பாண்டிய' என்று அருஞ்சொற்பொருளில் படித்து நினைவில் இருந்தது. இருப்பினும் சிரிப்பை மட்டும் தான் பதிலாக வைத்திருந்தேன். பின்னர் கல்லூரியிலும் என் நண்பர்கள் கேட்டதற்கு தெரியவில்லை என்றதும், டேய் பாண்டிய மன்னர்கள் சங்கம் வைத்து தமிழை வளர்த்தார்கள், இவங்க அப்பாவால முடியாது, அவருக்கு தெரியும் இவனவைத்து ஒன்றும் செய்யமுடியாது அதனாலவோ என்னவோ இவன் பெயர்லயாவது தமிழ் பெயர் இருக்கட்டும்னு இந்த பெயரை வைத்திருப்பார் என்று கேலி செய்தார்கள்.
என் அப்பாவிடம் கேட்டேன் எதற்காக இந்த பெயரை வைத்தீர்கள் என்று கேட்டேன். உறவினர்கள் எல்லோரும் தன் முதாதையரின் பெயர் அல்லது குலதெய்வத்தின் பெயரை வைப்பதுதானே வழக்கம். அப்படி இறுக்க ஏன் இந்த பெயரை வைத்தீர்கள் என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில் எனக்கு அதிர்ச்சியை தந்தது. அது வேறொன்றும் இல்லங்க என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தமிழ் நாவல் படிக்கும் பழக்கம் உண்டு. அவங்க படித்த சாண்டில்யன் எழுதிய யவனராணி நாவலில் சோழ மன்னனின் கிழக்கு போர்ப்படையின் தளபதியின் பெயர் இளஞ்செழியன். இந்த நாவலில் அவன் செய்த நம்பமுடியாத சாகசத்தையும் பின்னர் சோழநாட்டின் தலைமை தளபதியாகுவதுதான் இந்த நாவலின் கதை. நீயும் இளஞ்செழியன் மாதிரி சிறந்து விளங்கவேண்டும்னு உனக்கு இந்த பெயரை வைத்தேன்டா என்று சொன்னார், அவர் அப்படி சொல்லும்போது அவர்முகத்தில் ஒரு ஏக்கம் தெரிந்தது (ஏன்டா இந்த பெயரை இவனுக்கு வைத்தொம்னு ).
என் அப்பாவுக்கு ஆங்கிலத்தில் இளன் என்றால் வேகம், ஆர்வம் என்று பொருள் உண்டுன்னு தெரியாது, தெரிந்தால் இன்னும் வருத்தப்பட்டிருப்பார். என் தந்தையின் ஏக்கம் மற்றும் வருத்தத்தை போக்கி இளஞ்செழியன் என்ற பெயரை எனக்கு பொருத்தமானதாக ஆக்குவேன் என்ற நப்பிக்கையுடன் இந்த வலைப்பதிவை முடிக்கிறேன்.